search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமப்புற மக்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்த  மானியத்துடன்  வீடு கட்டும் திட்டத்தை  மீண்டும் செயல்படுத்த வேண்டும்  - பொதுமக்கள்  கோரிக்கை
    X

    கோப்புபடம். 

    கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    • மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், கிராமப்புற மக்கள் வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டது.
    • கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டங்கள் அமலில் உள்ளன.

    தாராபுரம்:

    கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டங்கள் அமலில் உள்ளன. குடிசைகளை ஓட்டுவீடாக மாற்ற 12 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கச்சா வீடுகள் கட்டப்பட்டது.60 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கான்கிரீட் தொகுப்பு வீடு கட்டும் திட்டமும் இருந்தது.

    தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளில் வீடு கட்டும் திட்டம் தொடர்ந்தது. கடந்த 2011 முதல் பசுமை வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அரசு மானியத்துடன் கான்கிரீட் வீடு கட்டினர். மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், கிராமப்புற மக்கள் வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டது.

    தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வரவே இல்லை. பயனாளிகள் கணக்கெடுப்பு பணியே முடியவில்லை. கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் அரசு மானியம் உயர்த்தப்படுமென எதிர்பார்த்தனர். மாறாக கடந்த ஆண்டு வீடு கட்டும் திட்டம் அடியோடு நிறுத்தப்பட்டது.

    நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சி மக்களுக்காக, குடிசைமாற்று வாரியம் மூலமாகவும் கான்கிரீட் வீடு கட்ட 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தது.இத்திட்டங்கள் 2021-22க்கு பிறகு செயல்பாட்டில் இல்லை. கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் அரசு மானியத்தில் கான்கிரீட் வீடு கட்டலாம் என்ற ஆர்வத்தில் இருந்தனர். அனைவரும், இதுவரை ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

    பொதுமக்கள் கூறுகையில், பசுமை வீடு திட்டம் நிறுத்தப்பட்ட பிறகு மாற்று திட்டம் வரவே இல்லை. மாநில அரசின் வீடு கட்டும் திட்டம் அறிவிப்புடன் நிற்கிறது.மத்திய அரசு திட்ட வீடு கட்ட, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் அத்திட்டமும் வரவில்லை. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கான திட்டம் நிறுத்தப்பட்டது கவலை அளிக்கிறது.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானியத்துடன் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றனர்.

    Next Story
    ×