

திருப்பூர்:
விசைத்தறியாளரின் கூலி உயர்வை வலியுறுத்தி 4-ந்தேதி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில், காரணம்பேட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
விசைத்தறியாளர்கள் 7 ஆண்டுகளாக கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். அமைச்சர்கள், கலெக்டர்கள் முன்னிலையில் கூலி உயர்வு அமல்படுத்தியும் அதை ஜவுளி உற்பத்தியாளர்கள் நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர்.
நாளை 3-ந்தேதி கோவை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் சோமனூர், பல்லடத்தில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.நகர உள்ளாட்சி தேர்தல் நடந்து வருவதால் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
எனவே விசைத்தறியாளரின் கூலி உயர்வை வலியுறுத்தி 4-ந்தேதி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில், காரணம்பேட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.