பல்லடத்தில் 2-வது நாளாக அதிக அளவில் ஜல்லி கற்கள் ஏற்றிய லாரி சிறை பிடிப்பு

நேற்று மாலை அதிக அளவு கனிமங்களை ஏற்றி வந்த 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
சிறை பிடிக்கப்பட்ட லாரி. 
சிறை பிடிக்கப்பட்ட லாரி. 
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள்,மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி நேற்று முன்தினம் அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக ரூ.2,04,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஊஞ்சபாளையம் பகுதியில் நேற்று மாலை அதிக அளவு கனிமங்களை ஏற்றி வந்த 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதி க்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக அந்த லாரிகளுக்கு ரூ.1,34,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் வரை, லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com