search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளக்கோவிலை தலைமையிடமாக  கொண்டு புதிய வட்டம்  -  பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    வெள்ளக்கோவிலை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் - பொதுமக்கள் வலியுறுத்தல்

    • காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டம் உருவாக்க வேண்டும்.
    • வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் வெள்ளக்கோவில் உள் வட்டம் அமைந்துள்ளது. இதில், 16 வருவாய் கிராமங்கள், 9 ஊராட்சிகள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் 3.40 லட்சம் பேரும், நகராட்சியில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் உள்ளனா். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 25க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் வங்கிகள், 89க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகள், 3 கல்லூரிகள் அமைந்துள்ளன.

    மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், 450க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், 10 பனியன் நிறுவனங்கள், 30 அரிசி ஆலைகள், 50-க்கும் மேற்பட்ட சமையல் எண்ணெய் ஆலைகள், 500 நிதி நிறுவனங்கள், 1,500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் கிடைத்து வருகிறது.

    காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என 1988-ம் ஆண்டிலேயே அன்றைய பேரூராட்சி மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட பல்வேறு வட்டங்கள் வெள்ளக்கோவிலை விட குறைந்த மக்கள்தொகையும், பரப்பளவும் கொண்டவையாக உள்ளன. ஆனால் வெள்ளக்கோவிலை தனி வட்டமாக அறிவிக்க போதிய மக்கள்தொகை, பரப்பளவு, வரி வருவாய் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    அதேபோல 1967-ல் உருவாக்கப்பட்ட வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியும் நீக்கப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகளின் அலட்சியத்தால் சட்டப்பேரவை தொகுதி நீக்கப்பட்டதுடன், தனி வட்டம் கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    எனவே வெள்ளக்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம், மீண்டும் வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×