சில்லரை மட்டும் இருந்ததால் கோவில் உண்டியலை புதரில் வீசிச்சென்ற கொள்ளையர்கள்

கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் ஏராளமான திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன.போலீசார் கூடுதல் ரோந்து மேற்கொண்டு திருட்டு ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில்லரை மட்டும் இருந்ததால் கோவில் உண்டியலை புதரில் வீசிச்சென்ற கொள்ளையர்கள்
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. சம்பவத்தன்று இரவு இங்குள்ள செல்வ விநாயகர் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். அதில் பணம் இல்லாமல் சில்லரை காசுகள் மட்டுமே இருந்ததால் உண்டியலை அருகில் உள்ள புதரில் வீசி சென்றுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் ஏராளமான திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் சொந்த ஊர் மற்றும் வெளியூர் சென்றுள்ளனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திய திருட்டு ஆசாமிகள் தங்களது கைவரிசையை காட்ட முயன்றுள்ளனர். முதலில் இங்குள்ள காட்டு பெருமாள் கோவிலில் பூட்டை உடைக்க முயன்றனர். முடியாததால் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.

சமீபத்தில்தான் இக்கோவில் உண்டியல் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனால், சில்லரை காசுகள் மட்டுமே இருந்த நிலையில் ஏமாற்றம் அடைந்த திருடர்கள் உண்டியலை காட்டுக்குள் வீசி சென்றனர். அதன்பின் கோவில் அருகில் உள்ள வீட்டின் கதவை உடைக்க முயன்று அதுவும் தோல்வியடைந்ததால், திரும்பிச் சென்றுள்ளனர்.

வீடுகள் அதிகமுள்ள இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே போலீசார் கூடுதல் ரோந்து மேற்கொண்டு திருட்டு ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com