நஞ்சராயன்குளம் சுற்றுச்சூழல், பொழுதுபோக்கு மையமாக உருவாக்கப்படும் - அமைச்சா் தகவல்

வெளிநாடுகளில் இருந்தும் 186 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.17 வது பறவைகள் சரணாலயமாக கடந்த ஏப்ரல் 11 ந் தேதி நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது.
நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயத்தை  அமைச்சர் ராமச்சந்திரன்  ஆய்வு செய்த  காட்சி. 
நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயத்தை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்த காட்சி. 
Published on

திருப்பூர் :

திருப்பூா் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் நிருபர்களிடம் கூறியதாவது :- திருப்பூா் மாநகரில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் 125 ஹெக்டா் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது எஸ்.பெரியபாளையம் மற்றும் நெருப்பெரிச்சல் கிராமங்களுக்கு இடையில் உள்ளது. இந்தக் குளத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 186 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குளிா் காலங்களில் வெளிநாட்டுப் பறவைகளின் வாழ்விடமாகவும் உள்ளது.

தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயமாக கடந்த ஏப்ரல் 11 ந் தேதி நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயம் அமைப்பதற்காக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பணிகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கையும் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த குளத்தை மேம்படுத்துவதற்காக திருப்பூரில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் நிதி வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா். இந்தக் குளம் சுற்றுச்சுழல் மையமாகவும், உதகையைப் போல தாவரவியல் பூங்கா அமைத்து சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மாற்றி அமைக்கப்படும். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

நஞ்சராயன் குளத்துக்குச் சொந்தமான இடம் கடந்த ஆட்சியில் விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் செல்வராஜ், கோவை மண்டல வனப் பாதுகாவலா் ராமசுப்பிரணியம், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையாளா் கிராந்திகுமாா் பாடி, சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com