

ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே திருப்பூர் மாநகரம் மற்றும் ஊத்துக்குளி வட்டத்தில் 440 ஏக்கர் பரப்பளவில் நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நஞ்சராயன் குளம் தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குளத்தில் 181 பறவை இனங்கள்,40 வகை பட்டாம்பூச்சிகள்,76 வகை தாவரங்கள்,11 வகை நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் 16 வகை பூச்சி இனங்களுக்கு வாழிடமாகவும்,வெளிநாட்டு பறவைகள் வலசை பாதையில் தங்கி செல்லும் இடமாகவும்,800 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குளம் இயங்கிவருகிறது.40ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய நீராதாரமாகவும் இந்த குளம் விளங்கி வந்தது. இந்தநிலையில் நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம்,ஈஸ்வரன்,நட்ராஜ் தாமோதரன்,இரவிச்சந்திரன்,நாகேந்திரன், குமார்,சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தற்போது இந்த குளத்தின் கரையில் இருந்து சாலை வரை ரூ.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஏக்கர் நிலம் வெறும் ரூ.1.5 கோடி ரூபாய்க்கு தனியார் டிரஸ்டிற்கு தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டுள்ளது.அந்நிறுவனம் தற்போது குளக்கரையிலிருந்து சாலை வரை நீர்வழிப் பாதைகளை மறித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறது.எனவே சட்டப் போராட்டம் நடத்தி நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.