search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு சாகுபடியில் வெண்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் -  அதிகாரி விளக்கம்
    X

    அதிகாரிகள் ஆய்வு கொண்ட காட்சி.

    கரும்பு சாகுபடியில் வெண்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - அதிகாரி விளக்கம்

    • மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள வறட்சியான காலங்களில் கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும்.
    • கரும்பு நடவு செய்யும் போது வேப்பம் புண்ணாக்கு இட்ட வயலில் இதன் தாக்குதல் இருக்காது.

    குடிமங்கலம்:

    கடந்த சில ஆண்டுகளாகவே தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை உள்ளிட்ட காரணங்களால் பணப்பயிரான கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் குறைந்துள்ளது. இந்தநிலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகார எல்லைகளுக்குட்பட்ட திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள கரும்புப் பயிரில் ஒருசில இடங்களில் வெண்புழுக்களின் தாக்குதல் தென்படுகிறது.

    இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் காளிமுத்து, மடத்துக்குளம் தாலுகா கணியூர், காரத்தொழுவு, பழனி தாலுகா நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    வெண்புழு தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அவர் கூறியதாவது:-

    மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள வறட்சியான காலங்களில் கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும். வெண்புழு தாக்குதலால் கரும்பு பயிரின் இலைகள் மஞ்சள் நிறமடைந்து வாடி சருகு போல மாறிவிடும். குருத்துப்பகுதி முழுவதும் காய்ந்து விடும். பாதிக்கப்பட்ட கரும்புத்தூரினை இழுத்தால் எளிதில் கையோடு மேலே வந்துவிடும். அத்துடன் வெண்புழுக்கள் வேர் மற்றும் அடிக்குருத்து பகுதியில் அதிக அளவில் சேதம் உண்டாக்கும். வெண்குருத்துப்புழு தாக்குதலை தவிர்க்க விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கலாம்.

    கரும்பு நடவு செய்யும் போது வேப்பம் புண்ணாக்கு இட்ட வயலில் இதன் தாக்குதல் இருக்காது. கோடை காலங்களில் அறுவடை முடிந்தவுடன் ஆழமாக உழவு செய்ய வேண்டும். வயலில் எப்போதும் ஈரத்தன்மை இருக்குமாறு வைத்திருக்க வேண்டும். இதனால் புழுக்கள் மண்ணை விட்டு வெளியே வந்துவிடும். பயிர் சுழற்சி முறைகளை கடைபிடித்தும் வெண்புழு தாக்குதல் பாதிப்பிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம். வெண் புழுக்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மெட்டாரைசியம் அனிசோபிலியே மற்றும் பிவேரியா பேசியானா ஆகிய உயிரியல் பூஞ்சானக் கொல்லிகளை தலா 5 கிலோ வீதம் எடுத்துக்கொண்டு 100 கிலோ மட்கிய தொழு உரத்துடன் நன்கு கலந்து 10 நாட்கள் வைத்திருந்த பின் பாதிக்கப்பட்ட இடங்களில் தூவி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு குருத்துக்கு 2 முதல் 5 புழுக்கள் வரை இதன் பாதிப்பு தென்பட்டால் ஊடுருவி பாயும் ரசாயன பூச்சிக்கொல்லிகளான குளோர்பைரிபாஸ் ஏக்கருக்கு 80 கிராம் என்ற அளவில் 80 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×