

பல்லடம் :
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறை, அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18டன், 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன், 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன், 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். உரிய அனுமதி சீட்டுக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் கனிமவள வருவாய் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம், பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.