search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தர்காவில் கார்த்திகை தீபம் நூற்றாண்டு கடந்து  ஓங்கும் ஒற்றுமை!
    X

    தர்காவில் கார்த்திகை தீபம் நூற்றாண்டு கடந்து ஓங்கும் ஒற்றுமை!

    • கார்த்திகை தீபத்தின் போது இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தீபம் ஏற்றுவது ஆண்டாண்டு கால வழக்கம்.
    • மதங்களை கடந்து மனித குல ஒற்றுமையே மேன்மையானது என்பதை கிராம மக்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே உணர்த்தி உள்ளனர்‌.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெரிய காணூர் கிராமம் உள்ளது.இங்குள்ள குளத்தின் கரையில் திப்புசுல்தான் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் தர்கா ஒன்று உள்ளது.இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள இந்து,இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வருவது பல நூற்றாண்டுகளாக தொடரும் ஒரு வழக்கமாக உள்ளது.

    திப்பு சுல்தான் ஆட்சியின்போது கட்டப்பட்டு,பின் அந்த தர்கா சேதமடைந்ததால் இக்கிராம மக்களே தற்போதுள்ள தர்காவை கட்ட இஸ்லாமிய மக்களுக்கு உதவியும் செய்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கார்த்திகை தீபத் திருநாளின் போதும் தங்கள் இல்லங்களில் தீபமேற்றிய பின் தர்காவுக்கு சென்று அங்கு தீபம் ஏற்றினர். இதனை ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு வழக்கமாக வைத்துள்ளனர்.

    இது குறித்து தீபம் ஏற்றிய கிராம மக்கள் கூறுகையில், திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி என எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் காணூர் தர்காவுக்கு வந்து செல்கின்றனர்.

    கார்த்திகை தீபத்தின் போது இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தீபம் ஏற்றுவது ஆண்டாண்டு கால வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் தர்காவில் தீபம் ஏற்றியதாக கிராம மக்கள் கூறினர்.

    மேலும் இந்த ஆண்டும் காணூர் குளத்தில் தண்ணீர் நிரம்ப வேண்டும் என குளக்கரையிலும் தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். மதங்களின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அதன் மூலம் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு வரும் சூழலில் பல ஆண்டுகளாக கிராம மக்கள் இஸ்லாமியர்களின் தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வருகின்றனர்‌.

    இது மதங்களை கடந்து மனித குல ஒற்றுமையே மேன்மையானது என்பதை கிராம மக்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே உணர்த்தி உள்ளனர்‌.

    Next Story
    ×