search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பல்லடம் தாலுகா உதவி மையத்தில் குவியும் பெண்கள்
    X

     விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள காத்திருந்த பெண்கள்.

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பல்லடம் தாலுகா உதவி மையத்தில் குவியும் பெண்கள்

    • ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • கணினி உதவியோடு இணையதளத்தின் மூலமாக ஊழியர்கள் சரிபார்த்து காரணங்களை தெரிவித்தனர்.

    பல்லடம்:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15 -ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தகுதியுடைய பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதற்கென இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

    அதன்படி நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டது. அப்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் பொதுமக்களின் விண்ணப்பத்தின் நிலையை ஆய்வு செய்தார். முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்திற்கு அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசு சார்பில் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமானது 30 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஆதார் கார்டு, குடும்ப அட்டையை கொண்டு வந்து சரி பார்த்துக்கொள்ளலாம் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று தாலுகா அலுவலகத்தில் மற்ற அலுவலகப்பணிகள் நிறுத்தப்பட்டு உரிமைத்தொகை சரிபார்க்கும் பணி மட்டுமே நடைபெற்றது.இதில் குடும்ப தலைவிகள் தங்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டை கொடுத்து விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டனர். கணினி உதவியோடு இணையதளத்தின் மூலமாக ஊழியர்கள் சரிபார்த்து காரணங்களை தெரிவித்தனர்.

    ஒரேநேரத்தில் இணையதளத்தை பயன்படுத்தியதால் சர்வர் மிகவும் தாமதமாக செயல்பட்டது.இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும்போது:- வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை இல்லாதவர்களுக்கு ரூ.1,000 செலுத்தியதும் வங்கி அந்த பணத்தை பிடித்துக்கொள்கிறது. அதுபோன்ற வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்பாமல் இருக்கிறார்கள்.

    அதுபோல் வங்கி கணக்குடன் ஆதார் எண், செல்போன் இணைக்காதவர்களுக்கும் பணம் அனுப்பாமல் உள்ளது. இதுபோன்ற குறைகளை அறிந்து இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தி வருகிறோம். சர்வர் மெதுவாக இருப்பதால் விரைந்து சரிபார்க்க முடியவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×