search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூச்சிகள்- புழுக்களை கட்டுப்படுத்தும் வகையில் - உடுமலையில் கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி தொடக்கம்
    X

    கோப்புபடம்.

    பூச்சிகள்- புழுக்களை கட்டுப்படுத்தும் வகையில் - உடுமலையில் கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி தொடக்கம்

    • இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது.
    • ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது. இந்த இடைக்கணுப் புழுக்களை ரசாயன மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அதேநேரத்தில் டிரைக்கோடிரெம்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிகிறது.

    இந்த ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக மாவட்டம் தோறும் ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி மையம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள பழைய வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடத்தில் உள்ளது.

    இந்த மையத்தில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த உற்பத்தி மையத்தில் தற்காலிகப் பணியாளர் மூலம் உற்பத்தி தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    இங்கு உற்பத்தி செய்யப்படும் டிரைக்கோடெர்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் கரும்பில் இடைக்கணுப் புழு மற்றும் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த முடியும்.அட்டைகளில் ஒட்டி வழங்கப்படும் இந்த முட்டைகளை கரும்பின் சோகையில் கட்டி விட வேண்டும். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது. ஒரு சிசி என்பது 100 முட்டைகள் அடங்கிய தொகுப்பு ஆகும்.

    இந்த அட்டைகளை மாலை நேரத்தில் வயலில் கட்ட வேண்டும். கண்டிப்பாக குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்கு எந்தவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக் கூடாது. இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் சிறிய ரகக்குழவி இடைக்கணுப் புழு, தண்டு துளைப்பான் போன்றவற்றின் முட்டைகளை அழிக்கிறது. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் தடைப்பட்டு முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதுபோல பருத்தியில் காய்ப்புழு, நெல்லில் இலைமடக்குப்புழு ஆகியவற்றையும் இந்த ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்த முடியும். இதுதவிர கத்தரி, வெண்டை போன்ற காய்கறிப்பயிர்களிலும் புழுக்களைககட்டுப்படுத்த இந்த ஒட்டுண்ணியைப்பயன்படுத்தலாம்.

    தற்போது ஒட்டுண்ணி உற்பத்திக்காக வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து கார்சேரா அந்துப்பூச்சியின் முட்டைகள் பெறப்பட்டு அவற்றை கம்பு, நிலக்கடலை, ஈஸ்ட் ஆகியவை அடங்கிய கலவையில் இட்டு மூடி வைத்து இனப்பெருக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அந்துப்பூச்சிகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் கருமுட்டைகள் அழிக்கப்பட்டு அதில் ஒட்டுண்ணிகள் வளர்க்கப்படுகின்றன. பின்னர் இந்த முட்டைகள் அட்டைகளில் ஒட்டப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும். இவ்வாறு வேளாண்துறையினர் கூறினர்.

    Next Story
    ×