

பல்லடம் :
தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது. இதே போல, கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் உதவியாளர்கள் பணிக்கு வரவில்லை. கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.