search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சலை தடுக்க ஓமியோபதி மருந்தை பயன்படுத்தலாம் -  அரசு முன்னாள் ஆலோசகர் டாக்டர் கிங் கலெக்டரிடம் மனு
    X

    டாக்டர் கே.கிங் கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு கொடுத்த காட்சி.

    டெங்கு காய்ச்சலை தடுக்க ஓமியோபதி மருந்தை பயன்படுத்தலாம் - அரசு முன்னாள் ஆலோசகர் டாக்டர் கிங் கலெக்டரிடம் மனு

    • திருப்பூரை சேர்ந்த டாக்டர் கே.கிங் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு கொடுத்தார்.
    • ஜீனியஸ் எபிடெமிக்ஸ் என்ற விதிப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓமியோபதி மருந்தை கொடுக்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு ஓமியோபதி மருத்துவ முன்னாள் ஆலோசகரும், ஓமியோபதி டாக்டர்கள் சங்க முன்னாள் மாநில தலைவருமான திருப்பூரை சேர்ந்த டாக்டர் கே.கிங் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    200 ஆண்டுகளுக்கு முன்பே டெங்கு காய்ச்சலுக்கு ஓமியோபதி மருந்து பயன்பாட்டில் இருந்துள்ளது. ஓமியோபதி மருந்துகள் பெரும்பாலும் உள்நாட்டு, வெளிநாட்டு மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. குறைந்த செலவில் இந்த மருந்தை அதிகப்படியான மக்களுக்கு வழங்கி டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும். ஒரே வகையான நோய் அறிகுறியால் (எபிடெமிக்) பலரும் பாதிக்கப்படும்போது ஜீனியஸ் எபிடெமிக்ஸ் என்ற விதிப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓமியோபதி மருந்தை கொடுக்கலாம்.

    கடந்த 2009-ம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தபோது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஏற்பாடு செய்திருந்த ஆயுஷ் மாநாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் ஓமியோபதி மருந்து பெட்டகத்தை நான் வழங்கினேன். விளக்கத்தை கேட்டு, மருத்துவர்கள் மத்தியில் தடுப்பு மருந்தை அமைச்சர் உட்கொண்டார்.

    தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அறியப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போர்க்கால அடிப்படையில் டெங்கு தொற்று பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கு ஓமியோபதி டாக்டர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு, குணப்படுத்தும் ஓமியோபதி மருந்தின் குறிப்புகளை பெற்று உடனடியாக மக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை ஆணையாளர், இந்திய மருத்துவத்துறை ஆணையாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். இதை அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×