search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பை தடுக்க புதிய திட்டம் - தமிழகத்தில் விரைவில் அமல்
    X

    கோப்பு படம்.

    ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பை தடுக்க புதிய திட்டம் - தமிழகத்தில் விரைவில் அமல்

    • என்னுடைய பில் என்னுடைய அதிகாரம் என்கிற புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
    • ஜி.எஸ்.டி., பில்களை பதிவேற்றம் செய்வோர் குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்

    திருப்பூர்:

    நுகர்வோரிடம் வசூலிக்கும் வரி முறையாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், வரி ஏய்ப்புகளை குறைப்பதற்காகவும், மத்திய அரசு, மேரா பில் மேரா அதிகார் அதாவது என்னுடைய பில் என்னுடைய அதிகாரம் என்கிற புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இதற்காக பிளேஸ்டோர், ஆப்ஸ் ஸ்டோரில் பிரத்யேக செயலியும் பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மொபைல் செயலியில் நுகர்வோர், தங்கள் பெயர், மொபைல் எண்ணை அளித்து எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். பொருட்கள் வாங்கும் போது ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்ததற்கான பில்லை போட்டோ எடுத்து இந்த ஆப் ல் அப்லோட் செய்ய வேண்டும். ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் 25 பில்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.

    ஜி.எஸ்.டி., பில்களை பதிவேற்றம் செய்வோர் குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவி க்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமாக அசாம், ஹரியானா, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள், புதுச்சேரி, டாமன், டையு, தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பகுதிகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.திட்டம் துவங்கிய 51 நாட்களிலேயே இந்த செயலி மூலம் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 972 ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றம் செய்ய ப்பட்டுள்ளன.

    இம்மாதம் மட்டும் குஜராத்தில் 93,576, அசாம் - 15,850, ஹரியானா - 35,429, புதுச்சேரி - 8,677, டாமன், டையூ, தாத்ரா நகர் - 1,351 என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 883 ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து திருப்பூர் ஆடிட்டர்கள் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு தடுப்பதற்கான புதுமையான முயற்சியாக, மேரா பில் மேரா அதிகார் திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளது. வணிகர் வழங்கும் ஜி.எஸ்.டி., பில், இந்த திட்டத்தில் மொபைல் ஆப் வாயிலாக நுகர்வோரிடமிருந்து அரசுக்கு சென்றடைந்து விடும்.

    இதனால் குறிப்பிட்ட வணிகர் முறையாக வரி செலுத்துகிறாரா, வரி ஏய்ப்பு நடைபெறுகிறதா என்பதை சுலபமாக கண்டறிய முடியும். அதனடிப்படையில் வரி ஏய்ப்பு தடுப்பு, ஏய்ப்பு வரியை வசூலிப்பது போன்ற துறைசார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

    வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள அரசுக்கு வரி வருவாய் இன்றியமையாததாக உள்ளது. இந்த திட்டம் மூலம் தாங்கள் செலுத்தும் வரி, முறையாக அரசுக்கு சென்றடைய வேண்டும் என்கிற பொறுப்பு நுகர்வோர் மத்தியில் அதிகரிக்கும். திட்டம் நடைமுறையில் உள்ள 3 மாநிலங்களில் நுகர்வோர் ஆர்வமுடன் ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளதால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை மத்திய அரசு விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×