ஒலிபெருக்கி மூலம் பயணிகளை அழைக்கும் அரசு பஸ் கண்டக்டர்
திருப்பூர் :
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தினமும் காலை 9.50 மணிக்கு கோபியில் இருந்து திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்தில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வருகிறார். பேருந்து நிலையம் என்றாலே அதிக அளவில் பேருந்து ஹாரன் சத்தம் இருக்கும், மேலும் கூட்ட நெரிசலும் காணப்படும்.
இதனால் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அதிக அளவில் சத்தம் போட்டு தங்களது வழித்தடத்தை சொன்னாலும் பலருக்கு தெரியாமல் போகிறது.
இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் பயணிகள் சிரமமின்றி பேருந்து ஏறுவதற்கு முயற்சி செய்த நடத்துனர் ஈஸ்வரமூர்த்தி , தனது சொந்த செலவில் ஒலிபெருக்கியை வாங்கி அதை பஸ்சின் முன் வைத்துள்ளார்.
அந்த ஒலிபெருக்கியில் கோபி, திருப்பூர், மதுரை பைபாஸ், தூத்துக்குடி, திருச்செந்தூர் என்று தெளிவாக உச்சரிக்கப்படுவதால் பேருந்து பயணிகள் பலருக்கும் இது உதவும் வகையில் உள்ளது. நடத்துனரின் இத்தகைய செயலுக்கு பேருந்து பயணிகள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

