தாயார் 2வது திருமணம் செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர், முத்துசாமி கவுண்டர் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு ரம்யா (வயது 23) மற்றும் திவ்யா (17) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ரம்யாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் இறந்த பின்பு மகேஸ்வரி 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் திவ்யா அவரது அக்கா ரம்யா வீட்டிற்கு சென்று அங்கேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது தாயார் மகேஸ்வரி 2-வது திருமணம் செய்தது பிடிக்காததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ரம்யா மற்றும் அவரது கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நைலான் சேலையால் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து ரம்யா அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

