

மடத்துக்குளம் :
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு முக்கியமாக பருவமழை அவசியமானதாக உள்ளது.உடுமலை பகுதியிலுள்ள அணைகள், குளங்கள் உட்பட நீராதாரங்களுக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளின் போதே நீர் வரத்து கிடைக்கிறது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததுடன் பாசனத்துக்கும் போதுமான தண்ணீர், திருமூர்த்தி, அமராவதி அணைகளில் இருந்து வழங்கப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பரவலாக அதிகரித்து காய்கறி சாகுபடி பரப்பு கூடுதலானது.
இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் சில நாட்கள் மட்டும் மழை பெய்தது.சமவெளி பகுதியில் மழைப்பொழிவு இல்லை.இதனால் பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பருவமழை தாமதித்தாலும் ஜூன் மாதத்தில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை மாறி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வறண்ட காற்றும், அதிவேகமாக வீசி வருகிறது.கிராம குளங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வறண்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாயமும், கால்நடைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விளைநிலங்களில் கோடை உழவு செய்து சாகுபடிக்கு தயார் செய்தோம். ஆனால் மழை தாமதித்து வருகிறது. தற்போது வீசி வரும் வறட்சியான காற்றால் விளைநிலங்களில் ஈரப்பதம் வேகமாக வற்றி விடுகிறது.தென்னை சாகுபடியில் பாசன மேலாண்மையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காய்கறி சாகுபடியிலும் பல்வேறு நோய்த்தாக்குதல் பரவி வருகிறது. விரைவில் பருவமழை துவங்கி தீவிரமடையும் என எதிர்பார்த்துள்ளோம்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.