பொதுவான இணைப்புக்கு புதிய மின் கட்டணம் வசூலிக்கப்படும் மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட உள்ளது.சீர்திருத்தம் என்ற அடிப்படையில் மின்வாரியத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர் :

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட உள்ளது.இதனால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் மத்தியில், நிதிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சீர்திருத்தம் என்ற அடிப்படையில் மின்வாரியத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 1டி எனப்படும் சீர்த்திருத்தம், கட்டட உரிமையாளர், வாடிக்கையாளர்களை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நான்கிற்கும் அதிகமான வீடுகள், அறைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளர்கள், அந்த வீடுகள் அறைகளுக்கு போர்வெல் தண்ணீர் இறைத்து வழங்குவதற்கென பொதுவான இணைப்பு (காமன் சர்வீஸ்) என்ற பெயரில் கூடுதலாக ஒரு மின் இணைப்பு பெற்றிருப்பர். அந்த இணைப்புக்கான கட்டணம் வீட்டு இணைப்புக்குரிய கட்டணத்தின் அடிப்படையில் தான் வசூலிக்கப்பட்டு வந்தது.தற்போதைய மாற்றத்தின் அடிப்படையில் அந்த காமன் சர்வீஸ் 1டி என வகைப்படுத்தப்பட்டு, ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பழைய கட்டணத்தை விட 3 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் இந்த நடைமுறை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1டி மாற்றத்தால் காமன் சர்வீஸ்க்கான இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்தாகும்.மின் கட்டணம் உயரும்.மற்றபடி தனித்தனி மின் இணைப்பு பெற்று மோட்டார் உள்ளிட்ட மின் சார்ந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வருவோருக்கு உயர்த்தப்பட்ட வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணமே வசூலிக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com