பருவமழை பெய்யாததால் பி.ஏ.பி., பாசனத்திற்கு நீர் திறப்பு தாமதமாக வாய்ப்பு

பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கப்படுகிறதுநீர்வரத்து இல்லாததால் மொத்தமுள்ள 60 அடியில் நிலவரப்படி 20.58 அடியாக குறைந்து காணப்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உடுமலை

பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கப்படுகிறது.வழக்கமாக, கோடை மற்றும் தென்மேற்கு பருவ மழையால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளான, சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்தது, தென்மேற்கு பருவ மழை ஒரு மாதம் தாமதமாக துவங்கியது ஆகிய காரணங்களினால் திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை.

அதே போல் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் மண்டல பாசனம் நிறைவு செய்ததும், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில், விடுபட்ட பகுதிகளில், கான்கிரீட் கால்வாயாக மாற்றும் பணி 3 இடங்களில் நடந்து வருகிறது.பிரதான கால்வாயில் 5 இடங்களில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளும் தாமதமாகி வருகிறது.

வழக்கமாக மண்டல பாசனத்திற்கு ஆகஸ்டு முதல் வாரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். நடப்பாண்டு பருவ மழை தாமதம், பணிகள் காரணமாக 4ம் மண்டல பாசனம் துவங்குவதும் ஒரு மாதம் வரை தாமதமாகும் நிலை உள்ளது.

திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து இல்லாததால் மொத்தமுள்ள 60 அடியில் நிலவரப்படி 20.58 அடியாக குறைந்து காணப்பட்டது. இதனால் விவசாயம் மட்டுமின்றி, குடிநீர் திட்டங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது, அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை துவங்கி நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதே போல் பராமரிப்பு பணிகளும் தாமதமாகி வருகிறது. ஆகஸ்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் வாய்ப்புள்ளது.

பருவ மழைகளும் ஒத்துழைத்தால், செப்டம்பர் முதல் வாரத்தில் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்பட்டு அம்மாத இறுதிக்குள் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளது என்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com