search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வக்கீலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
    X

    இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ரகுமான் கான்.

    வக்கீலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு

    • ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
    • பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் அமிர்நிஷா (21). இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு ஜமீலா பானு மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருப்பூர் குமரன் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தங்களது வக்கீல் அலுவலகத்தில் இருந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர்.அப்போது திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த வக்கீல் ரகுமான்கான் (26) என்பவர் ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். மேலும் தடுக்க வந்த ஜமீலாபானுவுக்கும் தலை, கையில் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அங்கிருந்து ரகுமான்கான் தப்பினார்.

    இதில் படுகாயம் அடைந்த தாய்-மகள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அமிர்நிஷா சேலம் கட்டக்கல்லூரியில் படிக்க சென்றபோது, ரகுமான் கான் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரகுமான்கானை கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரகுமான் கான் கோபத்தில் தாய்-மகளை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ரகுமான் கானை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகுமான் கான் திருப்பூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு பார்கவுன்சில் அவரை வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. தாய்-மகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ரகுமான் கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அத்துமீறி வக்கீல் அலுவலகத்துக்குள் நுழைந்த குற்–றத்–துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், பெண்களை தொல்லை செய்த குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வழக்கில் உதவுவதற்காக பெண் வக்கீலகள் சத்யா, பூங்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மாதத்துக்குள் சாட்சி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதுபோல் கொலைமுயற்சி வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்குவது இதுவே முதல் முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×