search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அல்லாளபுரம் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து பக்தர்கள் ஆலோசனை
    X

     கோவில் கும்பாபிஷேக விழா குறித்து பக்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.  

    அல்லாளபுரம் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து பக்தர்கள் ஆலோசனை

    • 2018ல் கும்பாபிசேகபணிகளுக்காக பாலாலயபூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவந்தது.
    • இருதரப்பு ஒத்துழைப்போடு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்ததனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்கோவிலில் கடந்த 2.6.1995ல் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதற்கிடையே 12 ஆண்டுகள் இடைவெளியில் கோவில்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்படவேண்டும் என்று ஆகம விதிகள் உள்ளதாக ஆன்மிக பெரியோர்க் கூறுகின்றனர். இந்த நிலையில், பல ஆண்டுகளாக திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்படாமல் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2018ல் கும்பாபிசேகபணிகளுக்காக பாலாலயபூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவந்தன.

    பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில், வரும் 8-9-2022 ஆவணி 23ந்தேதி வியாழக்கிழமை அன்று உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில், மற்றும் கரியகாளியம்மன் கோவில் ஆகிய 2 கோயில்களுக்கும் திருக்குட நன்னீராட்டு நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், திருக்குட நன்னீராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு தரப்பினர், ஆகம விதிகளுக்கு மாறாக அம்மன் சிலை உள்ளதாகவும், அதனை சரியான முறையில் வைத்து, கோவிலின் பழமையான முறைகள் மாறாமல் திருக்குட நன்னீராட்டு விழா நடத்த வேண்டுமென கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அல்லாளபுரம் கோவிலில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:- தொல்லியல் துறையின் கணக்குப்படி 400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில் முன்பு உலகேஸ்வரருக்கு வலதுபுறம் கிழக்குப் பார்த்து உண்ணாமுலையம்மன் சன்னதி அமைந்திருந்தது. கடந்த 1982 ம் ஆண்டு அம்மன் சன்னதி உலகேஸ்வரருக்கு இடதுபுறம் தெற்கு பார்த்து மாற்றி அமைத்து விட்டனர். இது ஆகம குறைபாடு, எனவே மீண்டும் அம்மன் சந்நிதி உலகேஸ்வரருக்கு வலதுபுறம் கிழக்கு பார்த்து அமைக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்ட திருக்கோவில்களின் ஸ்தபதி கார்த்திக் சுட்டிக்காட்டியுள்ள கோவிலில் இருக்கும் ஆகம குறைபாடுகளை சரி செய்து திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்து அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையர் அலுவலகத்திற்கு இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து அமைதி குழு ஒன்று ஏற்பாடு செய்து மீண்டும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு ஒத்துழைப்போடு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    Next Story
    ×