தூய்மைப்பணியாளர்களுக்கு கூலிைய உயர்த்தி வழங்க வேண்டும் சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்

திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தொழிற்சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து தூய்மை பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) செயலாளர் ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணி, குடிநீர் வழங்கல், வாகன ஓட்டுநர் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு ஆகிய பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில், தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் ரூ. 330 மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு ரூ. 300 வழங்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை பணியில் தனியார் நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் போது, தினக்கூலியை நிர்ணயித்து வழங்க வேண்டும் என பட்டியல் வழங்கியுள்ளது. ஆனால் அது வழங்கப்படுவதில்லை. ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது. இதில் இ.எஸ்.ஐ., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 16.21. பணியாளர் பங்களிப்பு ரூ. 3.74 பிடித்தம் செய்ய வேண்டும். அதேபோல் தொழிலாளர் பி.எப்., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 64.87. பணியாளர் பங்களிப்பு ரூ. 59.88 பிடித்தம் செய்ய வேண்டும்.

சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு ரூ. 12.88 இதில் ஒதுக்கப்படுகிறது. இதற்கு சேவைக்கட்டணம் 10 சதவீதம், ஜி.எஸ்.டி., 18 சதவீதம் பிடித்தம் போக தினமும், ரூ. 435.43 வழங்க வேண்டும். அதன்படி மாதம், 26 நாளுக்கு ஒருவருக்கு ரூ. 11,321.18 வழங்க வேண்டும். பிடித்தங்களுக்கு உரிய ஆவணம் வழங்க வேண்டும்.

இதிலும் ஒப்பந்த தாரர் பங்களிப்புத் தொகை, பணியாளர்கள் கணக்கில் இருந்தே செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு பணியாளரிடம் இருந்தும் ஏறத்தாழ 3 ஆயிரம் வரை குறைகிறது.ஒப்பந்த அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ளப்படும் பிற மாநகராட்சி, நகராட்சிகளில் வழங்கும் கூலியை ஒப்பிடுகையில் திருப்பூரில் மிகவும் மோசமான நிலை உள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் ரூ. 707 வழங்கி, பி.எப்., பிடித்தம் போக ரூ. 622 , திருச்சியில் 1,344 பேருக்கு தினக்கூலி ரூ. 575 , பிடித்தம் போக ரூ. 506 வழங்குகின்றனர்.கலெக்டர் நிர்ணயித்த அடிப்படையில் கூலி உயர்த்தி வழங்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக்க வேண்டும். ஒப்பந்த முறை கைவிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com