search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொலிவிழந்து வரும் வெற்றிலைக்கொடி விவசாயம்
    X

    கோப்புபடம்.

    பொலிவிழந்து வரும் வெற்றிலைக்கொடி விவசாயம்

    • கற்பூர வெற்றிலை என்பது கற்பூர மணத்துடன் சற்று காரம் அதிகமாக இருக்கும்.
    • வயிற்றுப்பொருமல், அஜிரணக்கோளாறுகளை நீக்கக்கூடியது.

    உடுமலை :

    உடுமலை, மடத்துக்குளம் மற்றும் கரைவழிப்பகுதிகளில் குறிப்பாக கணியூர்ப் பகுதிகளில் வெற்றிலைக்கொடி விவசாயம் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. கணியூரில் கடந்த நூற்றாண்டுகளுக்கும் முன்பு வரையிலும் பயிர் செய்யப்பட்டு வந்த வெற்றிலைகொடியில் குறிப்பாக சர்க்கரை வெற்றிலை, கற்பூர வெற்றிலை , கம்மாறு வெற்றிலை. இதில் கற்பூர வெற்றிலை என்பது கற்பூர மணத்துடன் சற்று காரம் அதிகமாக இருக்கும். கம்மாறு வெற்றிலை என்பது காரத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மென்று தின்னக்கூடியது. வயிற்றுப்பொருமல், அஜிரணக்கோளாறுகளை நீக்கக்கூடியது. சாப்பிட்டவுடன் நம் முன்னோர்கள் வெற்றிலை போடச்சொன்னதும் இதுவே காரணம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் , சுவாசப்பிரச்சினைகள், இருமல், சளி போன்றவற்றிற்கும் வெற்றிலை ஒரு மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

    கிராமப்பகுதிகளில் முதலில் திருமண அழைப்பு மற்றும் நல்ல காரியங்கள் அனைத்திற்கும் வெற்றிலை பாக்கு வைத்தே விருந்துக்கு அழைப்பர். கட்டாயம் விருந்து முடிந்தவுடன் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து விடுவர். அனைவரும் எடுத்துக்கொள்ளும் வகையில் நிரம்ப நிரம்ப வெற்றிலை பாக்கு சுண்ணாம்புடன் ஒரு தட்டில் வைத்து வழங்குவர்.

    கற்பூர வெற்றிலை, சர்க்கரை வெற்றிலை தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளம் பெருக நல்ல மருந்தாகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர். வெற்றிலை போட்டு நன்றாக நாக்கு சிவந்தால் அஜிரணம் நீங்குவதும், இதனால் அன்பு, பாசம் அதிகமாகும் என்று வட்டார வழக்கில் கூறுவதும் உண்டு. இன்று கரைவழியில் முப்போகம் நெல்விளைச்சலும் இல்லை. வெற்றிலை கொடி விவசாயமும் இல்லை. கணியூர் வெற்றிலை என்பது கோவை, மதுரை போன்ற பெரிய பெரிய ஊர்களிலிருந்து வந்து கணியூரில் தங்கி வாங்கிச்சென்ற காலங்களும் உண்டு.

    மேலும் கணியூர்ப் பகுதியில் விளைந்த சர்க்கரை வெற்றிலை, கற்பூர வெற்றிலை வெளிமாநிலங்களுக்கும் மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆனதாகவும் இங்கிருக்கும் வயதான பெரியோர்கள் கூறுகின்றனர்.சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்பு வரை கணியூர் முதன்மைச்சாலையில் தற்போதிருக்கும் ஐ.ஓ.பி., வங்கி வளாகத்தில் உள்ள (பசுமடத்தில்) வெற்றிலை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்சென்றுள்ளனர்.ஒரு சில நாட்களில் பெரிய அளவிற்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தக் கூட்டத்தைப் பார்ப்பதற்காகவே வேடிக்கை பார்த்ததாகவும் தற்போது வயது முதிர்ந்த பெருமக்கள் தெரிவிக்கின்றனர்.

    கரைவழி நாட்டில் நெல் மட்டுமல்லாது வெற்றிலை கொடி விவசாயம் சிறப்பாக இருந்ததையும் தற்போது அதுமிகவும் அருகி வருவதையும் நாம் நம் கண் முன்னே பார்த்து வருகின்றோம்.கரைவழிநாட்டு விவசாயம் குறித்தும் கரை வழிநாடு குறித்தும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×