search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உபரிநீர் குறைவால் தாமதமாகும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட சோதனை ஓட்டம்
    X
    கோப்புபடம்.

    உபரிநீர் குறைவால் தாமதமாகும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட சோதனை ஓட்டம்

    • மிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
    • திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.

    அவினாசி :

    ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்ற பெயரில் அத்திக்கடவில் இருந்து அவினாசிக்கு வாய்க்கால் வெட்டி, அதன்மூலம் வறண்ட பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகளை நீரால் நிரப்பும் திட்–டம் வகுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டம் அறிவிப்பாகவே பல ஆண்டுகளாக இருந்தது. தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

    அத்திக்கடவில் இருந்து கால்வாய் வெட்டுவதற்கு பதிலாக, ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம், காலிங்கராயன் அணைக்கட்டை ஒட்டிய பகுதியில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீர் எடுக்கப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ஏரி, குட்டை, குளங்களில் நீர் நிரப்பும் வகையில் இந்த பணி தொடங்கியது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றதும், இந்த பணியை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதுமட்டுமின்றி திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவை 15 ஏரிகள், 243 குட்டைகள் என 258 நீர்நலைகள், திருப்பூரில் 43 ஏரிகள், 385 குட்டைகள் என 428 நீர்நிலைகள், ஈரோடு மாவட்டத்தில் 16 ஏரிகள், 343 குட்டைகள் என்ற 359 நீர்நிலைகள் இந்த திட்டத்தில் எடுக்கப்பட்டன. இதன் படி நீர்வளத்துறை ஏரிகள் 32, ஒன்றிய ஏரிகள் 42, குட்டைகள் 971 என மொத்தம் 1,045 நீர்நிலைகள் மூலம் நிலத்தடி நீர் செறிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மொத்தம் 24 ஆயிரத்து 487 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். ஈரோட்டில் மட்டும் 8 ஆயிரத்து 767 ஏக்கர் பயன்பெற உள்ளது.

    ஏரி–கள் குளங்களை இணைக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பவானி ஆற்று உபரி தண்ணீரை நீரேற்றம் செய்ய பவானி காலிங்கராயன்பாளையம், நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் என 6 இடங்களில் தலைமை நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீரேற்று நிலையங்களை இணைக்கும் பிரதான குழாய்கள் 106.8 கிலோ மீட்டர் அளவுக்கும், ஏரிகள், குளங்களை இணைக்கும் கிளை குழாய்கள் 958.5 கிலோ மீட்டர் தொலைவுக்கும் அமைக்கப்பட உள்ளன.

    சுமார் 6 மாத காலமாக திட்டப்பணிகள் எப்போது முடியும் என்ற கேள்வி இருந்த நிலையில் அத்திக்கடவு- அவினாசி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டு அறிந்தார்.

    பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:- அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் 99 சதவீதம் நிறைவு பெற்று விட்டது. முன்னதாகவே இந்த பணிகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் உபரி நீர் வருகை குறைவாக இருந்ததால் சோதனை ஓட்டம் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இன்னும் 5 நாட்களில் தேவையான அளவு உபரி நீர் கிடைக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே சோதனை ஓட்டப்பணிகள் விரைவாக முடிக்கப்படும். இதன் மூலம் அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சோதனை ஓட்டமானது ஒவ்வொரு தலைமை நீரேற்று நிலையம் வாரியாக நடைபெறுகிறது. அந்தந்த பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் செலுத்தி, கசிவுகள், உடைப்புகள் சரி செய்யப்பட்டு முழுமை செய்யப்படுகின்றன. தற்போதைய திட்டத்தின் படி 1045 குளம், ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட குளங்களில் தடையின்றி தண்ணீர் சேர்க்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இன்னும் கூடுதலாக குளங்களை இந்த திட்டததில் சேர்க்க கோரிக்கைகள் வரப்பட்டு இருக்கின்றன. இதற்காக தனியாக திட்ட மதிப்பீடு தயார் செய்து வருங்காலங்களில் நீட்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

    Next Story
    ×