search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடிக்கும் அமராவதி அணை
    X

    கோப்புபடம்.

    ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடிக்கும் அமராவதி அணை

    • அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • அமராவதி ஆறு அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.

    அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அமராவதி நிரம்பியது. சூழ்நிலைக்கு ஏற்ப உபரிநீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அணை அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்தால் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக கூடுதலாக உபரி நீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை வைத்தால் அதன் பெயரில் கருத்துரு தயாரித்து அனுப்பப்பட்டு தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.46 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 483 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×