search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்
    X

    கோப்பு படம்.

    மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்

    • விரிவாக்க கிடங்குகளில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • தங்களுக்கு தேவையான இடு பொருட்களை உழவன் செயலி வாயிலாக பதிவு செய்து வாங்க முடியும்.

    உடுமலை,செப்.19-

    குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க கிடங்குகளில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    குடிமங்கலம் வட்டாரத்தில் பருவமழையை எதிர்பார்த்து மக்காச்சோளம், உளுந்து, பாசிபயறு, கம்பு, சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராக உள்ளனர்.

    வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய தேவையான அளவு விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மக்காச்சோளம் - 2,112 கிலோ, சோளம் (சி.ஓ.,32) - 1,300 கிலோ, சோளம் (கே-12) -492 கிலோ, உளுந்து (வி.பி.என்.,8) - 750 கிலோ, உளுந்து (வி.பி.என்.,9) - 217 கிலோ, உளுந்து (வி.பி.என்.,11) - 1,500 கிலோ, கொண்டைக்கடலை - 600 கிலோ, நிலக்கடலை (தரணி) - 1,260 கிலோ ஆகிய ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவையும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பயிர்களுக்கு நுண்ணூட்ட உரங்களான பயறு வகை நுண்ணூட்டம், தானிய வகை நுண்ணூட்டம் மற்றும் தென்னை நுண்ணூட்ட உரங்களும், உயிரியல் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகளான மெட்டாரைசியம் அனிசோபிலே, டிரைகோடெர்மா விரிடி, சூடோ மேனாஸ் ஆகியவையும் விவசாயிகளுக்கு வழங்க தயாராக உள்ளது.

    நடப்பாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு சிறுதானிய பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, கம்பு மற்றும் ராகி செயல்விளக்க திடல் அமைக்க, விதைகள், நுண்ணூட்ட உரங்கள், நுண்ணூட்ட சத்து உரங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்புகள், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.விவசாயிகள், தங்களுக்கு தேவையான இடு பொருட்களை உழவன் செயலி வாயிலாக பதிவு செய்தும், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டும் பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×