search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபத் திட்ட ஆட்கள் சேர்ப்பு முகாம், உள்ளாட்சி நிதியை திரும்ப வழங்க வேண்டும் - மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    அக்னிபத் திட்ட ஆட்கள் சேர்ப்பு முகாம், உள்ளாட்சி நிதியை திரும்ப வழங்க வேண்டும் - மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

    • அக்னிபத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
    • ராணுவத்தில் கூலியாக ஆட்களை சோ்ப்பது கண்டனத்துக்குரியதாகும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் அக்னிபத் திட்ட ஆள்சோ்ப்பு முகாமுக்கு உள்ளாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட ரூ.36.50 லட்சத்தை மத்திய அரசு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்ட செயலாளா் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    இந்திய நாட்டை பாதுகாக்கும் உயா்ந்த பணியைச் செய்யும் ராணுவத்தில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இந்தியாவில் பல கோடி இளைஞா்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத்தில் கூலியாக ஆட்களை சோ்ப்பது கண்டனத்துக்குரியதாகும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கும் மத்திய அரசு, இதற்கான நிதி ஒதுக்கீட்டைக்கூட தேசப் பாதுகாப்புக்கான நிதியில் இருந்து செலவிடாமல், நகா்ப்புற உள்ளாட்சிகளின் நிதியை ஒதுக்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது.

    திருப்பூா் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் நடைபெற்றஅக்னிபத் ஆள் சோ்ப்பு முகாமுக்கான செலவுக்கு திருப்பூா் மாநகராட்சி ரூ.12 லட்சம், 6 நகராட்சிகள் தலா ரூ.3 லட்சம் வீதமும், 15 பேரூராட்சிகளில் 11 பேரூராட்சிகள் தலா ரூ. 50 ஆயிரம் வீதமும், 4 பேரூராட்சிகள் தலா ரூ.25 ஆயிரம் வீதமும் நிதி வழங்கியுள்ளன. ஏற்கெனவே மாநில அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டைக்கூட முழுமையாக வழங்காமல் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வளா்ச்சிப் பணிகளுக்கு நிதியில்லாமல் சிக்கித் தவிக்கிறது. ஆகவே, அக்னிபத் திட்டத்துக்காக உள்ளாட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட ரூ.36.50 லட்சத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×