search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து ஊராட்சி அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது
    X

    கோப்புபடம்.

    அனைத்து ஊராட்சி அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது

    • மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நீல நிறத்திலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • 1,509 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஓர் முன்னோடி முயற்சியாகும். இந்த திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேகமாக நீல நிறத்திலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மாநில அளவில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 767 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,509 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகளை தீர்க்கும் விதமாக மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், இருமாதங்களுக்கு ஒருமுறை 2-வது செவ்வாய்க்கிழமை ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் முன்னிலையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன்தொடர்ச்சியாக நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு நீலநிற வேலை அட்டையை பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×