பல்லடம் அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். பல்வேறு இடங்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது,
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

 பல்லடம், செப்.3-

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி போலீஸ் சோதனை சாவடியில், காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.

இதையடுத்து அவர்களது மோட்டார் சைக்கிளில் சோதனை இட்டபோது அதில் செல்போன்கள் மற்றும் நகைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது, அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கருப்பன்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன் ராஜா (வயது 21) மற்றும் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டியை சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்பவரது மகன் ஜெபராஜ் (வயது 22) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது, இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 2.1/2பவுன் தங்கச் செயின், 1/4 பவுன் தங்க மோதிரம், மற்றும் 7 செல்போன்கள், மற்றும் கவரிங் நகைகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com