அவிநாசி பதிகம் 10,008 முறை பாராயணம் - 11-ந் தேதி நடக்கிறது

கலசங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத துரதிர்ஷ்டவசமான சம்பவம் என பக்தர்கள் வருத்தமடைந்தனர். காலை 7மணி முதல் 8 மணி வரை அவிநாசியப்பருக்கு அபிேஷக ஆராதனை நடைபெற உள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

அவினாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25ந் தேதி கலசங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது ஏற்றுக்கொள்ள முடியாத துரதிர்ஷ்டவசமான சம்பவம் என பக்தர்கள் வருத்தமடைந்தனர்.இது இறைவனின் செயலோ என்று பக்தர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பொக்கொளியூர் எனப்படும் அவிநாசியில் சிவபெருமான் பல்வேறு திருவிளையாடல் நிகழ்த்தியிருக்கிறார். முதலை உண்ட பாலனை மீட்டுத்தந்த இறைவன் தற்போதைய அசம்பாவிதங்களையும், சங்கடங்களையும், சாஸ்திர விதிமீறல்களையும் நிச்சயம் நீக்கிக்கொடுப்பார் என சிவனடியார்களும், சிவாச்சார்யார்களும் நம்புகின்றனர்.

அந்த வகையில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் வருகிற 11ந் தேதி சிறப்பு வழிபாடும், அவிநாசியம்பதியில் நம்பி ஆரூரர் அருளிய அவிநாசி பதிகத்தை 10 ஆயிரத்து 8 முறை பாராயணம் செய்து விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் ஆரூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் கூறுகையில், வரும் 11ந் தேதி காலை 7மணி முதல் 8 மணி வரை அவிநாசியப்பருக்கு அபிேஷக ஆராதனையும், அதனை தொடர்ந்து அவிநாசி பதிகத்தை 10 ஆயிரத்து எட்டு முறை பாராயணம் செய்யும் நிகழ்வும் நடைபெற உள்ளது. காலை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புண்ணிய கைங்கர்யத்தில் அனைத்து பக்தர்களும், சிவனடியார்களும் பங்கேற்று அனைத்துவித இன்னல்கள் நீங்கவும், விரைவில் கும்பாபிேஷக விழா நடைபெறவும் வேண்டி அவிநாசி பதிகம் பாடி இறையருள்பெறலாம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com