திருப்பூர் மாவட்டத்தில் 3 டாஸ்மாக் கடைகள் வரை மூட வாய்ப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுத்தும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.திருப்பூர் மாநகரப் பகுதியில் 110 மற்றும் புறநகர் மாவட்ட பகுதியில் 140 என மொத்தம் 250 மதுக்கடைகள் உள்ளன.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

சட்டசபை கூட்டத் தொடரில் துறைவாரியான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடந்தது.இதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுத்தும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.

அவ்வகையில் இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகரப் பகுதியில் 110 மற்றும் புறநகர் மாவட்ட பகுதியில் 140 என மொத்தம் 250 மதுக்கடைகள் உள்ளன.இவற்றில் விற்பனை குறைவான கடைகள், அருகருகே உள்ள கடைகள், கோவில், பள்ளி, பஸ் நிறுத்தம் போன்றவற்றுக்கு அருகே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள்,பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு உள்ள கடைகள் ஆகியன கண்டறியப்பட்டு அந்த கடைகள் மூடப்படும் எனத் தெரிகிறது.

இது குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுப்ரமணியம் கூறியதாவது:- அமைச்சர் அறிவித்தபடி செயல்படும் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். முழுமையான வழிகாட்டு அறிவுரைகள் குறித்த எழுத்துப்பூர்வமான உத்தரவு இன்னும் வரவில்லை. அந்த உத்தரவு வந்தவுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மூட வேண்டிய கடைகள் இருப்பின் அது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆய்வுகளின் அடிப்படையில் 2 அல்லது 3 கடைகள் வரை மூட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. திருப்பூரை பொறுத்தவரை மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகளவில் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  

X

Maalai Malar
www.maalaimalar.com