

ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலைகளில் சுற்றித்திரிந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் உள்ள காப்பகத்தில் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தகவல் வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டது. அந்த தகவலை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார், ஜோலார்பேட்டை போலீசாருடன் தொடர்பு கொண்டு இதுகுறித்த விவரங்களை கேட்டனர்.
போலீசாரால் மீட்கப்பட்டவர் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த வி.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கவுரவன் (வயது 80) என்பதும், இவர் கடந்த 5-ந் தேதி காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் காப்பகத்தில் இருந்து அவரை வரவழைத்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.