search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலி தொழிலாளிக்கு சரமாரி கத்திவெட்டு
    X

    கூலி தொழிலாளிக்கு சரமாரி கத்திவெட்டு

    • மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
    • மனைவி ஆள் வைத்து கொலை செய்ய திட்டமிட்டாரா? என விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய கோமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 42), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ரூபா(38) மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ராஜேஷ்குமார் நேற்று இரவு வீட்டின் வாசலில் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ராஜேஷ்குமாரை சரமாரியாக தாக்கியதோடு, அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    வலி தாங்க முடியாமல் கூச்சுலிட்டபடி ராஜேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், படுகாயம் அடைந்த ராஜேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உமாரபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ராஜேஷ்குமார் முன்னதாக ஒரு கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்துள்ளார். தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்யும் அவரது மனைவி ரூபாவுக்கும், வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

    இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. விசாரணையின் போது அவரது மனைவி ரூபா மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ரூபா தனது கணவனை ஆள் வைத்து கொலை செய்ய திட்டமிட்டாரா?, அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.

    குற்றவாளிகள் கைது செய்த பின்னரே, ராஜேஷ் குமாரை வெட்டியதற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

    இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×