டவுன் கோவில் கொடைவிழாவில் பட்டாசு பற்ற வைத்தபோது வெடித்ததில் வாலிபர் படுகாயம்-போலீசார் விசாரணை
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கோபாலசமுத்திரம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 33). கட்டிட தொழிலாளி.
இவர் டவுன் நதிபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அம்மன் கோவில் கொடை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் வானவேடிக்கை பணியை வேலாயுதத்தின் உறவினர்கள் மேற்கொண்டிருந்தனர்.
அப்போது மதுபோதையில் இருந்த வேலாயுதம் தானும் பட்டாசு வெடிப்பதாக கூறியுள்ளார். உறவினர்கள் தடுத்தும் அதனை கேட்காமல் வேலாயுதம் மதுபோதையில் பட்டாசு பற்றவைத்து வானத்தை நோக்கி எரிந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது கையில் பட்டாசு வெடித்தது. இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

