

நெல்லை:
மத்திய அரசை கண்டித்து நாளை மறுநாள் (திங்கட் கிழமை) மற்றும் 29-ந் தேதி இந்தியா முழுவதும் தொழிற் சங்கத்தினர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்திலும் தொழிற் சங்கத்தினர்கள், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அரசுத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று தி.மு.க. தொழிற்சங்க அலுவலகத்தில் தொ.மு.ச., கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர்.
இதில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யூசி., எஸ்.எம்.எஸ்., உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து நாளை மறுநாள் (28-ந் தேதி) நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர், சிங்கை, அம்பை, வீரவநல்லூர், முக்கூடல் ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் 29-ந் தேதி மேற்கண்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவை பெறுவதற்காக, அவர் களிடம் நோட்டீஸ் கொடுத்து விளக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி அனைத்து தொழிற்சங்கங்களும் வண்ணார்பேட்டை மற்றும் புது பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கி ஆதரவு கேட்டனர்.
இன்று தொழிற்சங்கத்தினர் நெல்லை டவுன் பகுதியில் பொதுமக்களிடம் நோட்டீஸ் கொடுத்து போராட்டத்திற்கு ஆதரவு கேட்டனர். இது போல அனைத்து பகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் பொது மக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்கள்.
வேலைநிறுத்தம் நடை பெறும் 28, 29-ந் தேதிகளில் ஆட்டோ, பஸ்கள் ஓடாது என்று தொழிற் சங்கத்தினர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் தொழிற் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழக அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினரும் வேலை நிறுத்தத் திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதனால் 28,29-ந் தேதிகளில் அரசு துறை நிறுவன பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.