பாளை வ.உ.சி. மைதானத்தில் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?-பொதுமக்கள் கோரிக்கை

பாளை வ.உ.சி.மைதானத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம்.
சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம்.
Published on

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது பொழுதுபோக்கிற்காகவும், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயணம் மேற்கொள்ளவும் மாநகரின் மையப்பகுதியான பாளை வ.உ.சி. மைதானத்தை பயன்படுத்தி வந்தனர். 

இந்த மைதானத்தில் தினமும் ஏராளமானோர் காலை மற்றும் மாலை வேளைகளில் குடும்பத்துடன் வந்து பலரும் பொழுது போக்கி செல்வார்கள். தற்போது மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன கேலரிகளுடன் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனை ஒட்டி அம்ருத் திட்டத்தின் கீழ் கடந்த 2017-18-ம் ஆண்டில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான ஊஞ்சல்கள், சறுக்குகள் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இது தவிர நீர்வீழ்ச்சிகள் போன்ற அமைப்பு, இரும்பு பொருட்களால் ஆன குதிரை உள்ளிட்ட விலங்குகள் உள்ளிட்டவை பார்ப்பவர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இதனைக் காண்பதற்கு ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து சென்றனர். ஆனால் காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இவை சிதிலமடைந்து விட்டன. 

தற்போது இந்த பூங்காவில் உள்ள சறுக்குகள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு விட்டது. ஊஞ்சலின் கம்பிகளும் அறுக்கப்பட்டுவிட்டது. இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது குடித்து விட்டு இந்த பூங்காவில் மது பாட்டில்களை வீசி விடும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. 

எனவே பொதுமக்கள் அதிக அளவில் பொழுதுபோக்கும் இடமாக உள்ள இந்த பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து மீண்டும் அதனை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com