

நெல்லை:-
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது.
அப்போது கண்டக்டர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் எடுக்கையில் ஒருவர் தனது மகனுக்கு 3 வயது ஆகிறது. எனவே டிக்கெட் எடுக்கவில்லை என்று கூறி உள்ளார்.
ஆனால் கண்டக்டர் அந்த சிறுவனுக்கு டிக்கெட் எடுக்கவேண்டும். இல்லை என்றால் சிறுவனின் வயதிற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என கூறினார்.
பயணி தன்னிடம் ஆதாரம் இல்லை என கூறவே கண்டக்டர் அந்த பயணியுடன் காரசார வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பயணிக்கும், கண்டக்டருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் செல்லும் வழியில் சமாதானபுரத்தில் வாக்குவாதம் முற்றவே பஸ் நிறுத்தப்பட்டது. இருவரும் சண்டை போட்டு பஸ்சை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.
இதனால் பஸ்சில் பயணித்த பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதில் 15 நிமிடங்கள் சமாதானப் புரத்தில் பஸ் நிறுத்தப் பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்தவர்கள் எடுத்துக்கூறி சிறுவனின் பெற்றோரிடம் டிக்கெட் எடுக்க சொன்னதால் அவர்கள் டிக்கெட் எடுத்தனர். பயணி டிக்கெட் எடுத்த பின்னரே பஸ்சை இயக்க கண்டக்டர் அனுமதித்தார்.