திருக்குறுங்குடி கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
கொடியேற்றம் நடந்த போது எடுத்தபடம்.
கொடியேற்றம் நடந்த போது எடுத்தபடம்.
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் கோவில் உள்ளது.

இங்கு நம்பி சுவாமிகள் 5 திருக்கோலங்களில் காட்சி அளிப்பது சிறப்புமிக்கதாகும். ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டது.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா 1&ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை)தொடங்கியது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. அழகியநம்பிராயர் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

அதனைதொடர்ந்து கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு தினசரி யாக சாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம், காலை மற்றும் இரவில் அழகியநம்பிராயர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 5&ம் நாளான 22&ந் தேதி நடக்கிறது. அன்று இரவில் 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்,

மறுநாள் அதிகாலையில் நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு திருக்காட்சி கொடுக்கின்றனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10&ம் திருநாளான அடுத்த மாதம் 27--&ம் தேதி நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com