

நெல்லை:
நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருந்து முருகன்குறிச்சி செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று வந்துள்ளது.
அந்த கார் ஊசி கோபுரம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் அந்த மின்கம்பம் இரண்டாக உடைந்தது. காரின் முன் பக்கம் பயங்கர சேதமடைந்தது. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் யாரும் இல்லாததால் காரை ஓட்டி வந்த நபர் உடனடியாக அங்கிருந்து காரை எடுத்துச் சென்றுவிட்டார்.
அதிகாலையில் மின்கம்பம் உடைந்து இருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சேதமடைந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தினர். உடனடியாக புதிய மின் கம்பத்தை நாட்டி மின் இணைப்பு வழங்கினர். அவர்களுக்கு அந்த பகுதியில் கடை வைத்திருந்தவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.