

நெல்லை:
நெல்லை வேய்ந்தான்-குளம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் புதிய பஸ் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள்.
மேலும் தினசரி பணிக்கு செல்பவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை அங்குள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். இதனால் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து பரபரப்-பாக காணப்படும். வார இறுதிநாட்கள், பண்டிகை நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
நெல்லை புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 48 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே இருந்த 4 நடைமேடைகளுடன், தற்போது கூடுதலாக 2 நடைமேடைகள், தரைத்தளம், முதல் தளத்தில் கடைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் நவீன முறையில் வாகன நிறுத்துமிடம், பஸ் நிலையம் முன்பாக அறிவியல் பூங்காவும் அமைந்து உள்ளது.
புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியின் இடதுபுறமுள்ள நுழைவுவாயில் வழியாக நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தட பஸ்கள் உள்ளே சென்று வருகிறது. அதேபோல் வலதுபுறமுள்ள வழியாக பஸ்கள் வெளியே செல்கிறது.
பஸ்நிலையம் சீரமைப்பதற்கு முன்பு பேருந்துகள் உள்ளே செல்லும் நுழையும் வாயில் முன்பாகவும், பேருந்துகள் வெளியே செல்லும் வழியின் முன்பாகவும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது பஸ்கள் செல்லும் நுழைவு வாயிலில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பஸ்கள் வெளியே செல்லும் வாசலின் முன்பு வேகத்தடை அமைக்கப்படவில்லை.
இதனால் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் அதிவேகத்துடன் செல்கிறது. இதேபோல் தென்காசி, பாபநாசம், கடையம், அம்பை மார்க்கமாக செல்லும் பஸ்கள் செல்லும் பஸ்நிலைய நுழைவுவாயிலிலும் வேகத்தடை அமைக்கப்-படாமல் உள்ளது.
இந்தசெயலால் பயணிகள் ஒருவித அச்சத்-துடனே சென்று வருகிறார்கள். மேலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே உடனடியாக பஸ்கள் வெளியேறும் வாசலில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.