

உடுமலை:
அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடிக்கு பிரதானமாகும். அணைக்கு வருகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து எதிர்பார்ப்புக்கும் மேலாக அணைக்கு நீர்வரத்து அளித்து உதவியது.
இதன் காரணமாக அணை நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. உடுமலை பகுதிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்பட்ட மழைபொழிவு காரணமாக பாசனத்துக்கு சீரான முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து அறுவடை நிலையை எட்டியது. விவசாயிகளுக்கு முதல் போகம் ஏமாற்றம் அளித்த நிலையில், இரண்டாம் போக நெல் சாகுபடி மேற் கொள்ளப்பட்டது.
அது தற்போது நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அமராவதி மற்றும் கல்லாபுரம் பகுதியில் நெல் அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. எந்திரத்தின் உதவியுடன் விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.