

கடலூர்:
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த கீழ்பெரும்பள்ளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 38). இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து கார் ஓட்டி வருகிறார். சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரை ஏற்றிக்கொண்டு சீர்காழி அடுத்த அக்கரைப்பேட்டைக்கு நேற்று இரவு கிளம்பினார். சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்தியசீலன் உயிரிழந்தார். காரில் வந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
அவ்வழியே சென்றவர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விக்ராந்த் (6), நிகல்யா (3) ஆகிய 2 குழந்தைகள் இறந்தனர். படுகாயமடைந்த 3 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியை சிதம்பரம் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.