search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய  தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - தங்கத்தேர் பவனி  5-ந் தேதி நடக்கிறது
    X

    உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 441-ம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத்தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

    தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - தங்கத்தேர் பவனி 5-ந் தேதி நடக்கிறது

    • தூத்துக்குடி மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி நடக்கிறது.
    • நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் இருந்து சைரன் ஒலிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள உலக புகழ் பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் தேர் தருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தங்கத்தேர் பவனி

    தூத்துக்குடி மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி நடக்கிறது. இந்த பேராலயத்தின் 441-ம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத்தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பங்குத்தந்தை குமார் ராஜா மற்றும் இறை மக்கள் கலந்து கொண்ட சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

    கொடியேற்றம்

    இதனை தொடர்ந்து பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் இருந்து சைரன் ஒலிக்கப்பட்டது. கொடிமரம் முன்பாக நூற்றுக்கணக்கான சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது.

    நிகழ்ச்சியில் சமூக நலத்துறைதுறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    அன்னைக்கு பொன் மகுடம்

    மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி வருகிற 5-ந் தேதி நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலை 5.15 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தங்கத்தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகிறார்.

    அதுபோல் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது.

    தினமும் ஜெபமாலை

    விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். மேலும் இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த தங்கத் தேர் சுமார் 216 ஆண்டுகள் பழமையானதாகும். 53 அடி உயரம் கொண்ட இந்த தேருக்கு, ஜப்பான் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட தங்க தாள்கள், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட 9 ஆயிரம் வைர கற்கள் ஆகியவை கொண்டு சுமார் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் தங்கத்தேர் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பில் எம்பரர் தெரு, கெரகோப் தெரு, குருசடி தெரு மற்றும் மனுவேல் ஜேக்கப் லேன் ஆகிய பகுதிகளை சுத்தப்படுத்தி பொதுமக்கள் ஆலயத்திற்கு வந்து செல்வதற்கு ஏற்றவாறு 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா மற்றும் அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

    டி.ஐ.ஜி., எஸ்பி. ஆய்வு

    இன்று தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை மொத்தம் 11-நாட்கள் நடைபெறும் திருவிழாவின் பாதுகாப்பு பணிகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஸ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் ஆலய வளாகம், பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுவதும் பார்வையிட்டு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறுகையில், திருவிழாவிற்காக மாதா கோவில் பகுதி முழுவதும் 50 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதைபோல் சீருடை இல்லாமல் 110-சிறப்பு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் உயர்மட்ட கோபுரங்கள் சில இடங்களில் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆலயத்திற்கு வரக்கூடியவர்கள் வாகனங்களை நிறுத்த ஆலயம் அருகிலேயே பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. திருவிழாவினை எவ்வித அசம்பாதவிதமும் இல்லாமல் நடைபெ றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யபட்டு உள்ளது என்றார்.

    Next Story
    ×