

ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் செய்யது இப்ராஹிம் நினைவு சூழற் கோப்பைக்கான மாவட்ட கால்பந்து போட்டி சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மைதானத்தில் 5 நாட்கள் நடைபெற்றது.
லீக் மற்றும் நாக்-அவுட் முறையிலான போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் யூ.எஸ்.சி. அணியும், நாசரேத் எம்.எப்.சி. அணியும் மோதின. விறுவிறுவிறுப்பான ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்தில் மோதியதால் ஆட்ட நேரம் முடியும் வரை கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதனால் டை-பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.இதில் இரண்டு அணிகளும் தலா 4 கோல்களை அடித்தன.
ஆகவே வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ‘சடன் டெத்’ முறையில் ஆட்டம் தொடங்கியது. இதிலும் தலா 1 கோல் அடித்த நிலையில் இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு காரணமாக ஆட்டத்தை தொடர முடியவில்லை.
இதன் பின்னர் முதலாம் மற்றும் இரண்டாம் பரிசை சேர்த்து இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுப்பதென நடுவர்கள் முடிவு செய்தனர்.
இதன்படி காயல்பட்டினம் அணியும் நாசரேத் அணியும் தலா ரூ.12 ஆயிரத்து 500 ரொக்கப் பணத்தை பெற்றுக் கொண்டன.பரிசு கோப்பை களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் டி.சி.டபுள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டி குழு தலைவர் முகமது அலி, ஒருங்கிணைப்பாளர் மீரா தம்பி, டி.சி.டபுள்யூ.நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்திருந்தனர்.