கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம்

கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
Published on

கோவில்பட்டி:

எட்டயபுரம் தாலுகாவில் உள்ள நம்பிபுரம் கிராமத்தில் கண்மாயில் குடிமராத்து பணிகள் மேற்கொண்டதில் ரூ. 7 லட்சம் மதிப்பில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், 

முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி தலைமையில் பெண்கள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து ஆர்.டி.ஓ. சங்கரநாராயணனிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எட்டயபுரம் தாலுகாவில் உள்ள நம்பிபுரம் கிராமத்தில் கண்மாய் நீர் தேங்கும் பகுதியில் ஆறு மடைகள், 6 ஷட்டர்கள் உள்ளன. இவை அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் போதுமான வாறுகால் வசதிகளும் இல்லை. 

அதுமட்டுமின்றி இருக்கக் கூடிய வாறு காலையும் தூர்வார வில்லை என்பதால் வாறுகால்கள் இருக்கும் இடம் தெரியாத நிலை உள்ளது. இந்த நீர்ப் பாசனத்தை கீழ நம்பிபுரம், நம்பிபுரம், பொன்னையாபுரம், கோட்டூர், வேடப்பட்டி, முதலிப்பட்டி, வடமலாபுரம், கிராமங்களை  சேர்ந்த விவசாயிகள் நம்பியுள்ளனர். 

கண்மாய் மற்றும் மடைகளை பராமரிப்பு செய்ய வலியுறுத்தி முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் என அனைத்து அரசு அலுவலங்களில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 

எவ்வித பணிகளும் செய்யப்படாமல் கடந்த காலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மூலம் அனைத்தும் செய்யப்பட்டதாக தவறான தகவல் கொடுத்தது மட்டுமின்றி, அதற்கான பில்லும் எடுத்துள்ளனர். 

எனவே இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாயின் கரையை உயர்த்தி, வாறுகால்களை தூர்வார வேண்டும், பழுதடைந்துள்ள ஷட்டர்களை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com