

தூத்துக்குடி:
ஸ்ரீவைகுண்டத்தில் சப்-கோர்ட்டு அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வழக்கறிஞர்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை அடுத்து கடந்த 1999-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் ஸ்ரீவைகுண்டத்தில் சப்-கோர்ட்டு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் சப்-கோர்ட்டு அமைக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்தில் உடனடியாக சப் கோர்ட்டு அமைக்க வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுடன் சென்று நேரில் சந்தித்து ஸ்ரீவைகுண்டத்தில் சப் கோர்ட்டு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு ஸ்ரீவைகுண்டத்தில் சப்-கோர்ட்டு அமைக்கப்படும் என அமைச்சர் ரகுபதி சட்டசபையில் அறிவித்துள்ளார்.