

உடன்குடி:
உடன்குடி ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் உடன்குடி பேரூராட்சி திருமண்டபத்தில் நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமிற்கு உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கி, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கி பேசியதாவது:--
வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்டப்படும். பழுதான கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும் என்றும்உள்ளாட்சியில் தமிழக அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசினார். முன்னதாககுழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயா துரைப்பாண்டியன் வரவேற்று பேசினார்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், மக்களை அணுகும் முறை, திட்டங்களை வார்டில் செயல்படுத்தும் பணிகள் முறை ஆகியவை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் பேசினார்.
உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மீரா சிராஜூதீன், பேரூராட்சி தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் குறித்து வட்டார ஒருங்கிணைப்பாளர் நவீன், திட்ட உதவியாளர் செல்வமனோகரி பேசினார்.
இதில் உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றூராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.