

செய்துங்கநல்லூர்:
மதுரை மேலூரில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வலியுறுத்தியும், கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரியும் வல்லநாட்டில் இன்று கடை யடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதனால் நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள நூற்றுக்கணக்கான கடைகள் இன்று அடைக் கப்பட்டிருந்தது.
தொடர்ந்து வல்லநாடு பஜாரில் வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை சிறுமி சம்பவ வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.