

முள்ளக்காடு:-
தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே டூவிபுரத்தில் உள்ள சங்கர நாராயணன் பொழுதுபோக்கு பூங்காவில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் சிறுவர்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே மழைநீரை வெளியேற்றி பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதுகுறித்து மாலை மலரில் செய்தி வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி பூங்காவிற்கு நேரில் சென்று பார்வையிட்டார், அப்போது அங்கிருந்த அங்கன்வாடி மையத்தையும் மாநகராட்சி பள்ளியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கன்வாடி மையத்தில் குடிநீர் வசதி இல்லாததை அறிந்து உடனடியாக குடிநீர்இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேயரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர்.
அப்போது மாமன்ற கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.